உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் அத்துரலியே ரத்தன தேரர்
நான்கு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவி விலகக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கடந்த 31 ஆம் நாள் தொடக்கம், கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தார்.
அவரது போராட்டத்துக்கு ஆதரவாக, நேற்று கண்டியில் முழுஅடைப்பு போராட்டமும், பேரணியும் நடத்தப்பட்டது. இதனால் கண்டியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
அத்துடன், கொழும்பு, சிலாபம், நீர்கொழும்பு, பதுளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அத்துரலியே ரத்தன தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பெரியளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அழுத்தங்கள் அதிகரித்த நிலையில் நேற்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகல் கடிதங்களை சிறிலங்கா அதிபரிடம் கையளித்தனர்.
அதனை அடுத்து, நேற்று மாலை 2.45 மணியளவில், அத்துரலியே ரத்தன தேரர் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து, அவர் கண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
றிசாத் பதியுதீனை அமைச்சர் பதவியில் இருந்து சிறிலங்கா அதிபர் நீக்க முடியாது என்றும், அதற்குத் தேவையான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எடுப்பார் என்று நம்புவதாகவும், அத்துரலியே ரத்தன தேரர் கூறினார்.