மொட்டு – கை கூட்டணியில் இழுபறி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், செயற்குழுக் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர், பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எனினும், இது குறித்து இன்னமும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக, சிறிலங்கா பொதுஜன முன்னணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை, பொதுஜன முன்னணியின் ஒரு பிரிவு ஆதரிக்கிறது.
எனினும், மற்றொரு பிரிவினர், தாமரை மொட்டு சின்னத்தில் தனியாகப் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
அத்துடன், தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் இருகட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைப்பதில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளன.