மைத்திரியைச் சந்திக்கிறார் சபாநாயகர் – முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு?
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜெயசூரிய தற்போது சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலை 4.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய அதிபர் செயலகத்துக்குச் சென்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, சிறிலங்கா அதிபருடன் சபாநாயகர் பேச்சு நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதன் மூலம் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அதற்கு உதவ தாம் தயார் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன், பெரும்பான்மை பலமுள்ளவர்களிடம் அதிகாரத்தை கையளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர், தனக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், சுமுகமான உறவுகள் இருப்பதாகவும் கூறியதுடன்,அவரைச் சந்தித்துப் பேச தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதன் பின்னணியிலேயே, இன்றுமாலை மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்க சபாநாயகர் கரு ஜெயசூரிய சென்றுள்ளார்.
இந்தச் சந்திப்பில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.