மேலும்

நாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர், சபாநாயகர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுதிநிலையை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் எடுத்துள்ள முயற்சிக்கு அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும், நாளை ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனையும் சந்தித்து தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐதேமு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையிலும், நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மாற்று முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *