மகிந்த பதவி விலகவில்லை – நாமல் அறிவிப்பு
பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை தமது கட்சியினர் நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவு, இடைக்கால உத்தரவே என்றும், இதுவே வழக்கின் இறுதியான தீர்ப்பு அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் மகிந்த?
சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக, பொதுஜன முன்னணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தி வைத்துள்ளதை அடுத்தே மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, மகிந்த ராஜபக்ச தனது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பதவியை விட்டு விலக வேண்டும் என்று மங்கள சமரவீர கோரியிருந்தார்.
அதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடும் என்றும், அங்கு தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இதனிடையே, சபாநாயகர் கரு ஜெயசூரிய நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை நாளை காலை 8.30 மணிக்குக் கூட்டியுள்ளார்.