சற்று நேரத்தில் வெளியாகிறது உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்படவுள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று காலை தொடக்கம் நடத்தப்பட்ட விசாரணை இன்று பிற்பகலும் தொடர்ந்து இடம்பெற்றது.
இதையடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில், நீதியரசர்கள் குழாம் மாலை 5 மணி வரை அமர்வை ஒத்திவைத்துள்ளது.
மாலை 5 மணியளவில் மீண்டும் நீதிமன்றம் அமர்வு ஆரம்பமாகும் போது, இந்த மனுக்கள் மீதான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு இன்று இடைக்கால ரதடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், உச்சநீதிமன்றத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.