யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு – தமிழ் காங்கிரஸ் இடையே கடும் போட்டி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், சில உள்ளூராட்சி சபைகளின் வட்டார ரீதியான முடிவுகள் தெரிய வந்துள்ளன.
இதற்கமைய, யாழ். மாநகரசபையின் குருநகர் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிய வருகிறது.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் நல்லூர் இராசதானி வட்டாரத்தில் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில், நெல்லியடி வட்டாரத்திலும் தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் 8 ஆவது வட்டாரத்தில் போட்டியிட்ட தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் வெற்றி பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் பிரதேச சபையின் 4 ஆவது வட்டாரத்தில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
அதேவேளை, பல வட்டாரங்களில் தமிழ் அரசுக் கட்சிக்கும், தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாகவும் தெரிய வருகிறது.
தீவகத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் 8 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை ஈபிடிபி கைப்பற்றும் நிலையில் இருப்பதாகவும், ஊர்காவற்றுறை பிரதேசசபையின் 8 வட்டாரங்களில் 5 வட்டாரங்களில் ஈபிடிபி முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபையின் 8ஆம், 9ஆம் வட்டாரங்களில் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
காரைநகர் பிரதேச சபையின் 1ஆம், 2ஆம், 3 ஆம் வட்டாரங்களை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியிருக்கிறது.
எனினும், இறுதியான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னமும் வெளியாகவில்லை.