யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்ட 6 பேர் கொழும்பு, வவுனியாவில் கைது
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட ஆறு இளைஞர்கள் கொழும்பிலும், வவுனியாவிலும் மறைந்திருந்த போது, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கைகளின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் மூவர் கொழும்பிலும், ஏனைய மூவர் வவுனியாவிலும் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்தில் மானிப்பாய், கோப்பாய், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியது, வன்முறைகளில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவரான 22 வயதுடைய இளைஞன், இந்த வன்முறைக் குழுவின் இரண்டாவது தலைவராகச் செயற்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 17 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்கள் கோண்டாவில், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.