ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – கொழும்பு வருமாறும் அழைத்தார்
ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக சிறிலங்காவை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக, ஐ.நா பொதுச்செயலர் உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் தெரிவித்தார்.
சிறிலங்காவுடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை பலப்படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் முழுமையான உதவிகளை வழங்க தொடர்ச்சியாக, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் உறுதியளித்தார்.
அதேவேளை, அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, இதற்கு உலகின் அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பும் நட்புறவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொண்டு நல்லிணக்க கொள்கையுடன் பயணிக்கும் சிறிலங்காவின் தற்போதைய முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக, சிறிலங்காவுக்குப் பயணம் செய்யுமாறும், ஐ.நா பொதுச்செயலருக்கு அழைப்பு விடுத்தார்.