காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் – பின்வாங்கியது அரசு
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அனைத்துலகப் பிரகடனம் வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அன்றைய நாள் இது குறித்து விவாதிக்கப்படாது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
“சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடந்த ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
20 ஆவது திருத்தச்சட்ட வரைவு குறித்தும் விவாதம் நடத்துவதில்லை என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் புறப்பட முன்னர், கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது, பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனம் தொடர்பான விவாதம், 21ஆம் நாள் நடத்தப்படாது என்று சிறிலங்கா அதிபர் தம்மிடம் உறுதியளித்திருந்தார் என்று தினேஸ் குணவர்த்தன தகவல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.