பொன்சேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் – வீரவன்ச போர்க்கொடி
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறிலங்காப் படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அதே வழிமுறையின் கீழ் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான சாட்சியங்கள் இருந்தால், அதனை அவர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடம் முறையிட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.