நியாயமான விசாரணை நடத்த தவறியதால் தான் ஐ.நா விசாரணை – இரா. சம்பந்தன்
போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் பிரவேசிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
இதனால் விசாரணைக் குழுவினரால் உண்மையான விபரங்களை அறிந்து கொள்வதில் சிக்கல் நிலைமை நீடித்து வருகிறது.
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற போர் தொடர்பான விடயங்கள் குறித்து நாம் கேள்வி எழுப்பவில்லை.
போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவே கேள்வி எழுப்புகிறோம்.
போர் முடிந்த பின்னர் சிறிலங்கா அரசாங்கம் சுயாதீனமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாதால் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தி வருகிறது.
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டமும் நாட்டில் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வடக்கு மாகாணசபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய போதிலும், அரசியல்வாதிகளுக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.
சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீண்டும் பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.