அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – சிறிலங்காவிடம் இந்தியா கவலை
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பது குறித்து சிறிலங்காவிடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இது தீவிரமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் என்று, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக, சிறிலங்காவுக்கு இந்த தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றிடம், சிறிலங்கா அமைச்சர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான வரைவு உடன்பாடு குறித்து, துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, தனியார் மயமாக்கல் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவரான கலாநிதி சரத் அமுனுகமவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.