இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வம்
சமுத்திரங்களில் தடையற்ற வணிகத்தை பாதுகாப்பதற்கும், அமைதியான கடற்பயணங்களை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் கடல்சார் சக்திகளுடன் இணைந்து செயற்பட சிறிலங்கா ஆர்வமாக இருக்கிறது என்று அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட ஹட்சன் நிறுவகத்தில், ‘சிறிலங்கா: இந்தோ- பசுபிக்கில் வளரும் கடல்சார் கேந்திரம்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பண்டைய காலத்தில் இருந்தே சிறிலங்காவின் அமைவிடம் அமைதி மற்றும் உறுதிநிலையை அடைவதற்கான கடல்சார் கேந்திரமாக இருந்து வந்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இந்த முக்கிய வகிபாகத்தை மீண்டும் அடைவதிலும், அதனை இந்தோ பசுப் வரை விரிவாக்கம் செய்வதற்கும் சிறிலங்கா அக்கறை கொண்டுள்ளது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தின் வளர்ந்த பிரதான நாடுகளுடன் கடல்பாதைகளை இணைக்கும் இடத்தில் சிறிலங்கா அமைந்துள்ளது. இந்த பரபரப்பான கடல்பாதை சிறிலங்காவுக்கு தெற்கே 6 கடல்மைல் தொலைவில் உள்ளது.
இதன் வழியாக உலகின் மூன்றில் இரண்டு பங்கு பெற்றோலிய விநியோகமும், அரைப்பங்கு கொள்கலன் போக்குவரத்தும் இடம்பெறுகின்றன.
கொழும்பு துறைமுகம் ஏற்கனவே தெற்காசியாவில் போக்குவரத்து நெருக்கடிமிக்க துறைமுகமாக இருக்கிறது.
தற்போதைய அனைத்துலக சூழலில் பல நாடுகள் பாதுகாப்பற்றவையாகவும், கொந்தளிப்பு அல்லது சுற்றுச்சூழல் சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும் இருக்கின்றன.
இந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்கா அமைதியான நாடாக உள்ளது. ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மீளமைக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.