சிறிலங்கா குறித்த தீர்மானத்தை பிரித்தானியாவே முன்வைக்கும் – ஜெனிவாவில் அறிவிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறை பிரித்தானியா முன்வைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடருக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் நேற்று ஜெனிவாவில் இடம்பெற்ற போதே இந்த தகவல் பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு சிறிலங்காவுக்கு காலஅவகாசத்தை அளிக்கும் வகையில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்த தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், வரும் 28ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.
எனினும், வரும் 27ஆம் நாள் தொடக்கம் அடுத்தமாதம் 22ஆம் நாள் வரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விவாதம், மார்ச் 22 ஆம் நாள் இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னர், சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே முன்வைத்து வந்தது. எனினும், அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தெளிவான நிலைப்பாடுகள் எடுக்கப்படாத நிலையில், இம்முறை தீர்மானத்தை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது.