இறுதிக் கட்டத்தை எட்டியது எட்கா உடன்பாடு – இந்திய குழு கொழும்பிலிருந்து புறப்பட்டது
இந்தியா- சிறிலங்கா இடையில் கொழும்பில் இந்தவாரம் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து எட்கா உடன்பாடு தொடர்பான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எட்கா உடன்பாடு குறித்து சிறிலங்காவுடன் பேச்சு நடத்த இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்திருந்தது. இந்தக் குழு பேச்சுக்களை முடித்துக் கொண்டு நேற்று புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக, இந்தியத் தூதரக ஊடகச் செயலர் நிதின் யோலா தகவல் வெளியிடுகையில்,
“எட்கா உடன்பாட்டின் இறுதிக்கட்டம் தொடர்பாக பேச்சு நடத்தவே இந்திய அதிகாரிகள் கொழும்பு வந்திருந்தனர். பேச்சுக்கள் நன்றாக இடம்பெற்றன.
உடன்பாட்டை இறுதி செய்யும் கட்டத்தை இருதரப்புகளும் நெருங்கி விட்டன. இந்தப் பேச்சுக்களால் எட்கா உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சில பிரச்சினைகள் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு இரண்டு தரப்புகளும் இன்னமும் பணியாற்ற வேண்டியுள்ளது. எப்போது உடன்பாடு இறுதி செய்யப்படும் என்று கூற முடியாது” என்று தெரிவித்தார்.