மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு ஒன்றுமில்லை
எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது.
விகாரமாதேவி பூங்காவில் புத்தர் சிலையருகே இன்று காலை 9 மணியளவில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், இறுதி நேரத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அங்கு வேறொரு இடத்தில் வைத்து தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒலிபெருங்கி கருவிகளும் இயங்கவில்லை.
எனினும் திட்டமிட்டபடி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
100 நாள் செயற்திட்டத்தை உள்ளடக்கிய அவரது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்த எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.
அதேவேளை, தாம் வெற்றி பெற்றால், ஏப்ரல் 23ம் நாள் அல்லது அதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து காபந்து அரசின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்படும்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு ஆசனங்களை வெல்லும் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்படுவார்.
இரண்டாவது கூடிய ஆசனங்களை வெல்லும் கட்சியின் தலைவர் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார்.
ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் எல்லா அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.
தேசிய அரசாங்கத்தின் கீழ், மோசமான தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும்.
மகிந்த ராஜபக்ச அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால், இன்னொரு போர் உருவாகும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், மீண்டும் விடுதலைப் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்.
தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனவரி 10ம் நாள் சிறிலங்கா அதிபராகப் பதவியேற்பேன்.
ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வரும் ஏப்ரல் வரை பிரதமராக நியமிப்பேன்.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்படும். அவற்றின் தலைவர்களும், அவர்கள் பயன்படுத்திய அரசு சொத்துக்கள் குறித்தும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சரத் பொன்சேகாவும், முன்னாள் பிரதம நிதீயரசர் சிராணி பண்டாரநாயக்கவும் இழந்த நிலைகள், உரிமைகள் மீள வழங்கப்படும்.” என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.