சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை – அஜித் பெரேரா
சிறிலங்காவில் இராணுவப் புரட்சிக்கு இடமேயில்லை என்று சிறிலங்காவின் பிரதி அமைச்சர், அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் நசுக்கப்பட்டால் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கடந்த சனிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எச்சரித்திருந்தார்.
இதகுறித்து நேற்று பண்டாரகமவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், அஜித் பெரேரா,
“இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் தான் ஆட்சி செய்ய முடியும்.
அரசியல் வழிமுறைகளுக்கு அப்பால், சர்வாதிகார முறையில் ஆட்சியைப் பிடிக்க முயன்றால், அனைத்து மக்களும் வீதிக்கு வந்து அதற்கு எதிராக திரண்டு நிற்பார்கள்.
துருக்கியில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது போன்ற நிலையே ஏற்படும்.
நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்வது என்பது பிரச்சினையல்ல. சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக, ஐதேகவாக, ஜேவிபியாக அல்லது வேறு எந்தக் கட்சியாகவும் இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தை உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டியது கட்டாயம்.
இந்த நாட்டின் அபிவிருத்தி, மற்றும் முழுமையான எதிர்காலமும், ஜனநாயகத்தில் தான் தங்கியுள்ளது. எனவே அதனை நாம் இழந்து விட முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.