வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்
வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும், மாவீரர் நாள் வரும் கார்த்திகை 27ஆம் நாள், தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம்.
போர் மற்றும் இராணுவக் கெடுபிடிகளால் கடந்த பல ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வுகளை வடக்கில் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை காணப்பட்டது.
எனினும், இந்த ஆண்டு மாவீரர் நாளை தமிழ் மக்கள் வெளிப்படையாக நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வரும் கார்த்திகை 27ஆம் நாள், நல்லூரில் மாவீரர்கள் நினைவாக நிகழ்வு நடத்தப்படும் என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, வடக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதால், அதன் உறுப்பினர்களை நினைவு கூருவது சட்ட விரோதம் என்று அவர் கூறியுள்ளார்.
மாவீரர் நாளை பகிரங்கமாக நடத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.