வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்கா நிராகரித்தது குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஏமாற்றம்
போர் தொடர்பாக பொறுப்புக்கூறும் உள்ளகப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், மறுப்புத் தெரிவித்திருப்பது குறித்து, அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் வெளியுறவுக் குழுவின் ஆசிய பசுபிக் உபகுழுவில், சிறிலங்கா தொடர்பாக நேற்று நடந்த கலந்துரையாடலின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க – சிறிலங்கா உறவுகளில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது என்றும், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாளுக்குப் பின்னர், சிறிலங்காவில் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், அமெரிக்க காங்கிரசின் வெளியுறவுக் குழுத் தலைவர், மாட் சால்மன் தெரிவித்தார்.
எனினும், கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் நாளுக்குப் பின்னரும், சிறிலங்காவில் சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறலுக்கான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கத் தவறியுள்ளதும் அதில் அடங்கும்.
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகள் குறித்து கவலை தெரிவித்த மாட் சால்மன், சீனாவின் நிதியில் கொழும்பில் துறைமுக நகர கட்டுமானத் திட்டம் இடம்பெறுவது குறித்தும் கரிசனை வெளியிட்டுள்ளார்.