பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பணியில் இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்கள்
கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து, இந்தியக் கடற்படை மருத்துவக் குழுக்களும், மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன.
சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது.
இந்தக் கப்பல்களில், இந்தியக் கடற்படையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும், உதவியாளர்களும் கொழும்பு வந்துள்ளனர்.
இவர்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களிலும், சிறிலங்கா கடற்படை மருத்துவக் குழுவினருடன் இணைந்து, மருத்துவ உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாட்டு கடற்படைகளையும் சேர்ந்த, 18 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 70 மருத்துவ உதவியாளர்கள், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.