நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்க அமீர் அலி முடிவு – மகிந்தவின் வலையில் வீழ்ந்தார் ரிசாத்
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார்.
அமீர் அலிக்கு நாடாளுமன்ற ஆசனத்தை விட்டுக் கொடுப்பதற்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார் ஏ.எச்.எம்.அஸ்வர்.
எனினும், அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காமல் இழுத்தடித்து வந்தார்.
இந்தநிலையில், அமீர் அலி நாடாளுமன்ற ஆசனத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கே அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.