சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளைப் பாராட்டுகிறார் ஜோன் கெரி – மங்களவைச் சந்திப்பு
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை வொசிங்டனில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலரும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரும் இணைந்து ஊடகங்கள் மத்தியில் உரையாற்றினர்.
இதன் போது கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி,
“எனது நண்பரான சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை இங்கு வரவேற்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். சிறிலங்காவில் அவருடன் இணைந்து நான் ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டிருந்தேன்.
மனதைக் கவரும் வகையில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்தும் நகர்வுகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.
பிராந்திய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கும், மற்றும் மிக முக்கியமாக, தமது நாட்டில் அமைதியைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளும் அவர்களின் முயற்சிகள் முக்கியமானவை. நாங்கள் உங்களை உண்மையாக வரவேற்கிறோம்.
நாங்கள் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். சிறிலங்காவுடனான மூலோபாய பேச்சுக்கள் எமது அடிநிலைச் செயலர் ரொம் சானொன் தலைமையில் இடம்பெறும்.
இந்தப் பேச்சுக்கள் ஒரு வரைவைத் தீர்மானிக்கும் வகையில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதனை நாம் எதிர்பார்க்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.