தமிழர்களுக்கு சிறிலங்கா சமஉரிமையை வழங்க வேண்டும் – வெங்கய்ய நாயுடு
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று இந்தியாவின் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
விஜயவாடாவில் நடைபெற்ற பாஜகவின் புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு பொறிமுறை ஒன்றின் மூலமாக தமிழர்களுக்கு சம உரிமையையும், சமமான வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கொள்கையை குறை கூறுபவர்கள், சிறிலங்காவையோ அல்லது சீனா போன்ற ஏனைய அயல் நாடுகளையோ பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தான் தமிழ்நாட்டு மீனவர்கள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டனர்.
இது இருநாடுகளுக்கும் இடையிலான நிலையான உறவுகளுக்கு உதவியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.