எதிரணியின் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது
அடுத்தமாதம் சிறிலங்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்றுகாலை புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் முதலில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, அர்ஜுன ரணதுங்க, மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க,
மைத்திரிபால சிறிசேன என்பவர், ஜனநாயகத் தலைவர். எதிர்க் கருத்துக்களை வெளியிடுவோரை வீதியில் கொன்று குவிக்காதவர்.
அடுத்தவர்களின் கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய, பொறுமைசாலியான தலைவராவார்.
எதிரணியின் இந்த புதிய போராட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் குழுவொன்றே இருக்கிறது.இன்னும் பலர் வரவிருக்கின்றனர்.
தற்போதுள்ள ஊழல், மோசடிமிக்க அரசாங்கத்தைப் போன்ற அரசாங்கமொன்று எந்தவொரு தசாப்தத்திலேனும் இருக்கவில்லை.
இன்று எமது நாடு உள்ள அபாயகரமான சூழ்நிலையை மாற்ற வேண்டும். அதற்காக, மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்க நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று தெரிவித்தார்.