புலிகளைத் தோற்கடித்த சிறிலங்காவுக்கு அஜித் டோவல் பாராட்டு
விடுதலைப் புலிகளை சிறிலங்கா அரசாங்கம் வெற்றிகரமாகத் தோற்கடித்ததற்கு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பாராட்டுத் தெரிவித்துள்ளார். (இரண்டாம் இணைப்பு)
காலியில் இன்று காலை ஆரம்பமான, கடல் பாதுகாப்புக் கருத்தரங்கின் ஆரம்பத்தில், நிகழ்த்திய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சில விடயங்களில், சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் கூட, இந்தியா தனது அயல்நாடுகளுடன் நல்ல இருதரப்பு உறவுகளைக் கொண்டிருக்கிறது.
5000 ஆண்டுகளாக இந்தியா ஒரு அமைதியான சக்தியாக இந்தப் பிராந்தியத்தில் இருந்து வருகிறது.
இந்தியப் பெருங்கடல் வெவ்வேறு நாடுகளின் செழிப்புக்கு பங்களிக்க வேண்டுமாக இருந்தால், இது ஒரு அமைதி வலயமாக தொடர்ந்திருக்க வேண்டும்.
1971ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையில் இந்தியப் பெருங்கடலை ஒரு அமைதி வலயமாகப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில், வல்லாதிக்க சக்திகள் தமது இராணுவப் பிரசன்னத்தை அதிகரிக்கவோ, விரிவாக்கவோ அனுமதிக்கக் கூடாது என்று என்று கோரி, சிறிலங்கா கொண்டு வந்த தீர்மானம் முக்கியமானதாக இருந்தது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் குறித்து இந்தியா தீவிரமான கவலையை வெளியிட்டுள்ள நிலையில், அஜித் டோவலின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.