இன்று சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் – தமிழிலும் தேசியகீதம் பாட ஏற்பாடு
சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இன்று காலை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. இதில் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படவுள்ளது.
இன்று காலை காலிமுகத்திடலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதில் சிறிலங்கா அதிபர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இந்த நிகழ்வில், முதலில் சிங்களத்திலும், அதையடுத்து, தமிழிலும் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்படும்.
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் முதலாவது சுதந்திர நாள், 1949ஆவது ஆண்டில், கொண்டாடப்பட்ட போது, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த இந்த முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்து. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரசாங்க நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அந்த தடை மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், தமிழில் தேசிய கீதும் பாடப்படுவது அரசியலயமைப்புக்கு முரணானது என்று மகிந்த ராஜபக்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.