மகிந்தவுக்கு கைகொடுக்கிறது பொது பல சேனா
சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொது பல சேனா அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இந்த முடிவை அறிவித்தார்.
“சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நாட்டின் சிறந்த குடிமக்கள்.
நாம், அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை, நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.
இன்று நாடு ஏற்கனவே ஆபத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சி பொம்மைகளால் நிரம்பியுள்ளது.
இந்த அரசாங்கத்துகு மக்கள் வாக்களிக்காது போனால், நாடு கொள்ளையிடப்பட்டு விடும்.
பல்வேறு சதித்திட்டங்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க நாம் முடிவு செய்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.