தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
இன்று மாலை 6.05 மணியளவில், ஆலயங்களிலும், ஏனைய இடங்களிலும் ஒரு நிமிடம் மணி ஒலி எழுப்பப்பட்டது.
அதையடுத்து, 6.06 மணியளவில், மாவீரர்கள் நினைவாக, ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, முதல் மாவீரன் லெப்.சங்கர் உயிர் துறந்த, மாலை 6.07 மணியளவில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமது இல்லங்களிலும், பொது இடங்களிலும், சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், வீடுகளில், தமிழ்மக்கள் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதேவேளை, இந்தியாவிலும், புலம்பெயர் நாடுகளிலும், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.
இந்தநிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர் உள்ளிட்ட சுமார் 15 பேர் வரையில் பங்கேற்றனர்.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயும், உள்ளேயும், பெருமளவு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சுமார் 10 வரையான மாணவர்கள், படையினரின் காவலையும் மீறி மாணவர் பொது அறையிலும், செல்வநாயகம் மண்டபத்துக்கு முன்பாகவும், தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.