பிள்ளையானை டிசம்பர் 10 வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை, அடுத்த மாதம் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு டிசெம்பர் 25ஆம் நாள் அதிகாலை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பிள்ளையானின் முன்னாள் சகாக்களான பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து, பிள்ளையானும் கைது செய்யப்பட்டார்.
அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் நிறுத்தி, தொடர்ந்து தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்.
இதற்கமைய, இன்று (நவம்பர் 4ஆம் நாள்) வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பிள்ளையானை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிபதி கிகான் பிலபிட்டிய முன்னிலையில் நிறுத்திய போது, டிசெம்பர் 10ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.