பறிபோனது 2.5 மில்லியன் டொலர்- கண்டுபிடித்தது 200 டொலர்
சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவிய இணைய மோசடியாளர்களால், திறைசேரியில் இருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வு அதிகாரிகளிடம் உதவி கோரியிருந்தனர்.
இந்த விசாரணைகளின் மூலம், ஒரு பகுதி பணம் அமெரிக்காவின் டெலவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கும், மற்றொரு பகுதி வேறொரு மாநிலத்தில் உள்ள வங்கிக்கணக்கிற்கும் மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
டெலவேர் வங்கிக்கணக்கு வெறுமையாக இருந்த நிலையில், மற்றொரு கணக்கில் 200 அமெரிக்க டொலர்கள் எஞ்சியிருப்பதாக, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளால் சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன நிலையில், 200 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
