சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பெலாரஸ் பயணம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டிற்கான அதிகாரபூர்வ பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.
அவர் இன்று முதல் 15 ஆம் நாள் வரை பெலாரசுக்கு மேற்கொள்ளும் அதிகாரபூர்வ பயணத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையே, பல உடன்பாடுகள் மற்றும் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளன.
விமான சேவைகள், உயர்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் பெலாரஸ் அரசாங்கத்திற்கும் இடையிலான விமான சேவைகள் உடன்பாடு, சிறிலங்காவின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் பெலாரஸின் கல்வி அமைச்சுக்கும் இடையிலான உயர்கல்வி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்பாடு, சிறிலங்காவின் சுகாதார அமைச்சுக்கும் பெலாரஸின் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான சுகாதார சேவைகள் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்பாடு ஆகியன கையெழுத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
