இந்தியா- சிறிலங்கா தரைவழிப்பாதை- அவசியம் மட்டுமல்ல, அவசரமானது
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத் தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும், இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கி.மீ மட்டுமே.
ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிச் சாலை, தொடருந்து இணைப்பு, முறையாகச் செயல்படும் படகு சேவை அல்லது மின்சாரக் கட்டமைப்பு இணைப்பு எதுவும் இல்லாதது ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாடு.
இத்தகைய இணைப்பை ஏற்படுத்துவது இரு நாடுகளின் பொருளாதாரப் புவியியலை முழுமையாக மாற்றியமைக்கும்.
ஒரு பிராந்திய மையமாக மாறுவதற்கான சிறிலங்காவின் இலட்சியத்திற்கு இது ஒரு பெரிய உந்துதலை வழங்கும்.
தற்போது இந்தியா, சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஆதாரமாகவும், அந்நிய நேரடி முதலீட்டிற்கு முக்கியப் பங்களிப்பாளராகவும் உள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்கா செய்யப்பட்ட மொத்த முதலீடுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்திய முதலீடுகளாகும்.
தொலைத்தொடர்பு, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், நிதிச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளன என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
