அதிபர் செயலகத்தில் இன்று அவசர கூட்டம்- முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்?
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அல்லது அரச மற்றும் தனியார் துறை வேலை நாட்களைக் குறைக்கும் திட்டம் குறித்து தீர்மானிக்க இன்று அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, அரச அதிகாரிகளை வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், வேலை நாட்களை குறைப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்தும் முக்கியமாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்களாக குறைப்பது, அல்லது வீட்டில் இருந்து வேலை செய்வது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் அத்தியாவசிய பொது சேவைகளைப் பராமரிப்பதில் உள்ள சவால்களை மீளாய்வு செய்வதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க நேற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் நேற்றும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார்.
