மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி மன்னாரில் அமைதிப் பேரணி
வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி, மன்னாரில் நேற்று அமைதி பேரணி நடத்தப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் அடம்பன் சந்தியில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி, மாந்தை திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் வரை, முன்னெடுக்கப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள், “எங்கே எங்கள் உறவுகள்?”, “மனிதனும் புதைகுழிக்குள் நீதியும் புதைகுழிக்குள்ளா?”, “வேண்டும் சர்வதேச விசாரணை!”, “இது நாடா இடுகாடா?”, “சர்வதேசமே மௌனத்தை கலை” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த அமைதிப் பேரணி திருக்கேதீஸ்வரத்தில் உள்ள மனித புதைகுழி பகுதியில் நிறைவடைந்த பின்னர், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும், புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டவர்களுக்கும் மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் முடிவில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி கோரி-பொதுமக்களால் தயாரிக்கப்பட்ட மனு, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.