சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பரிந்துரை
சிறிலங்காவுக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க இராஜதந்திரி எரிக் மேயர் (Eric Meyer) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இவரை, அசாதாரண மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராகப் பணியாற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பரிந்துரைத்துள்ளார்.
அவரது இந்தப் பரிந்துரை அமெரிக்க செனட்டின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் சேவையின் மூத்த தொழில்சார் உறுப்பினரான எரிக் மேயர், தற்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் மூத்த அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், சிறிலங்கா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பரந்த பிராந்தியத்தின் பணியக செயல்பாடுகளை அவர் மேற்பார்வையிடுவதுடன், அமெரிக்க கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கிறார்.