மேலும்

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காலை யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ் மாநகர சபையில்,  இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈபிடிபி  மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் கொண்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாரின் பெயரையும் முன்மொழிந்தன.

பகிரங்க வாக்கெடுப்பு  நடத்தப்பட்ட போது,  ஈபிடிபி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் ஆதரவுடன், தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட மதிவதனி விவேகானந்தராஜா, 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவானார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகள் கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்தது.

அதேவேளை, துணை முதல்வராக தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் இமானுவேல் தயாளன் தெரிவாகியுள்ளார்.

பிரதி முதல்வர் பதவிக்காக, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி துரைராசா ஈசனையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இமானுவேல் தயாளனையும் நிறுத்தியிருந்தன.

வாக்கெடுப்பில்,  இமானுவேல் தயாளன் 19 வாக்குகளையும், துரைராசா ஈசன் 16 வாக்குகளையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *