ஐதேக அதிபர் வேட்பாளர் – நாளை முடிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் நாளை சந்தித்துப் பேசும் போது இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் மற்றும் பரப்புரை ஒழுங்குகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
அதிபர் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அதிபர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்பட்டதும், இந்தத் திட்டம் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் சஜித் பிரேமதாச இன்று ஐதேமுவின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.