ஜப்பான்- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கைச்சாத்து
ஜப்பானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரடாவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் இந்த உடன்பாட்டில் கையெடுத்திட்டனர்.
ஜப்பானின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவுக்கும் இடையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த பேச்சுக்களை அடுத்தே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு, கடற்படை ஒத்துழைப்பு, தகவல் மற்றும் ஆற்றலை் பகிர்வு, திறன் மேம்பாடு, கலந்துரையாடல், பயிற்சி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, பலபக்க பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஜப்பான்- இலங்கை இடையே, பெரியளவிலான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் எட்டும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கும் உதவிகளுக்கு குறிப்பாக, இரண்டு கடலோரக் காவல் படகுகளையும், கடலோரக் காவல் படையினருக்கான பயிற்சிகளையும் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.