தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு
உலகின் ஏனைய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, சிறிலங்கா அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
எதிர்காலத்தில் தீவிரவாதக் குழுக்களை தடுப்பதற்காக, புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இந்த சட்டங்கள் தீவிரவாதிகள் உருவாகுவதைத் தடுப்பதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, பிரித்தானியா போன்ற பிற நாடுகளில் நடைமுறையில் உள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களை அமைச்சரவை உபகுழு ஆய்வு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.