மேலும்

உபாலி தென்னக்கோன் தாக்குதல் – கைரேகையால் மாட்டினார் இராணுவ அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடந்த நாளில் தென்னக்கோனின் வாகனத்தில் கிடைத்த கைரேகை, தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் இராணுவ அதிகாரியான லலித் ராஜபக்சவின் கைரேகையுடன் ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின்  இணைப்புச் செயலர் சிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

உபாலி தென்னக்கோனின் வாகனத்தில் அவரது கைரேகை எப்படி பதிவானது என்று சந்தேக நபர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இராணுவ அதிகாரி லலித் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறு சட்டமா அதிபர், டப்புல டி லிவேரா, குற்ற விசாரணைப் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும், சிஷார ஜெயரத்ன கூறினார்.

2009 ஜனவரி 23ஆம் நாள் உபாலி தென்னக்கோன் இனம்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அவரும், அவரது மனைவியும் காயமடைந்தனர்.

லலித் ராஜபக்ச, சர்ச்சைக்குரிய திரிப்பொலி முகாமில் இருந்த ஒரு இராணுவ அதிகாரி என்று கூறப்படுகிறது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர்கள் கீத் நொயார், நாமல் பெரேரா ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்களுடன், திரிப்பொலி இராணுவ முகாமில் இருந்த இராணுவ புலனாய்வு பிரிவினர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *