சோபாவின் தாக்கங்கள் குறித்து ஆராய இரண்டு குழுக்கள- மகிந்தவினால் நியமனம்
அமெரிக்காவுடன் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.
சோபா உடன்பாட்டினால், அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நாட்டுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான இந்த குழுவில், வெளிநாட்டு உறவுகள் மற்றும் கொள்கைசார் நிபுணர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டாவது குழுவில் மூன்று அதிபர் சட்டவாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, இந்த உடன்பாட்டினால், நாட்டின் சட்டத்துறையில் ஏற்படக் கூடிய தாக்கங்களை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது.
நாளை இந்தக் குழுவினர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவுள்ளனர். ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் இந்த இரண்டு குழுக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.