மேலும்

காத்தான்குடியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி அருகேயுள்ள ஒல்லிக்குளம் பகுதியில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்கொலைக் குண்டுதாரி சஹ்ரானின் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவு தலைவரான மொகமட் மில்ஹான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

அங்கு கைது செய்யப்பட்டு கடந்த ஜூன் 14ஆம் நாள் சவூதி அரேபியாவில் இருந்து சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மில்ஹான், விசாரணைகளின் போது, வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நேற்று மாலை, ஒல்லிக்குளம் பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டது,

இதன்போது, 300 ஜெலிக்நைட் குச்சிகள், 1000 டெட்டனேற்றர்கள், 8 லீற்றர் திரவ ஜெலிக்நைட்,  டெட்டனேற்றர் வயர்கள், 500 ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் ஆகியன  கைப்பற்றப்பட்டன.

மில்ஹானை ஒல்லிக்குளத்துக்கு கொண்டு சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர், அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கைப்பற்றியதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டுநொவம்பர் 30ஆம் நாள் மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட தாக்குதலுடன் மில்ஹான் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *