மேலும்

‘சோபா’வின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் குறித்து பொம்பியோவுடன் பேச திட்டம்

அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய பிரிவுகள் தொடர்பாக, கொழும்பு வரும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவுடன் பேச்சு நடத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ எதிர்வரும், 27ஆம் நாள் கொழும்பு வரவுள்ளார்.

இதன்போதே, ‘சோபா’ உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் குறித்து அவருடன் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

அமெரிக்காவுடன் ‘சோபா’ உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

எனினும், ‘சோபா’ உடன்பாடு குறித்து முதன் முதலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியது என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அப்போது அமெரிக்காவுடன் பேசிய மகிந்த ராஜபக்ச இப்போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முரணானது என்றும் அவர் கூறினார்.

அவரது ஆட்சிக்காலத்தில் முன்மொழிந்த அல்லது கையெழுத்திடப்பட்ட திட்டங்கள், உடன்பாடுகளுக்கு பின்னர் அவர் எதிர்ப்புத் தெரிவிப்பது இது முதல்முறையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *