முழு அடைப்பு போராட்டத்தினால் முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தும் வகையில், இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தினால், வடக்கு மாகாணம் முழுவதும், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து வணிக நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை.
பாடசாலைகளிலும் மாணவர்கள் வருகை தராததால், மூடப்பட்டிருந்தன. அரச செயலகங்களுக்கு குறைந்தளவிலான பணியாளர்களே வருகை தந்திருந்தனர்.
தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. வங்கிகளும், வணிக வளாகங்களும் இயங்கவில்லை. வீதிகளில் வாகனப் போக்குவரத்துகளை குறைந்தளவிலேயே காண முடிந்தது.
இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணம் முற்றிலுமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, முடங்கிப் போயுள்ளது.