மேலும்

மைத்திரியின் காலையும் வாரினார் வியாழேந்திரன் – ரணிலுக்கு ஆதரவு

மகிந்த ராஜபக்சவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர்.

எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மைத்திரி- மகிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை அடுத்து, இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், முன்னதாக கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும் , கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரனும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரி- மகிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *