மேலும்

நாளை பிரதமராக பதவியேற்பார் ரணில்?

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பெரும்பாலும் நாளை பதவியேற்பார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதன்போதே, மகிந்த ராஜபக்ச உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் இணங்கினார் என்று கூறப்படுகிறது.

இதற்கமைய, பெரும்பாலும் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நேற்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, தனது ஊடகப் பிரிவினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, தீர்ப்பு வெளியாகி 24 மணித்தியாலங்களுக்குள் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன், ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுக்களை நடத்தி வருவதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *