மகிந்தவுக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு
சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிரதமராக மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா அதிபரால் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும், செயற்படுவதற்கு தடை விதிக்கக் கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீது இன்று மாலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
122 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தாக்கல் செய்த மனு மீது வரும் 12ஆம், 13ஆம் நாள்களில் விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கப்படும் வரை, மகிந்த ராஜபக்ச பிரதமராகவோ, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தத்தமது பணிகளையோ ஆற்ற முடியாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
தகுதியற்ற தனிநபர்கள் பிரதமர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை ஆக்கிரமித்தால் மீள முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று, நீதிபதிகள் தமது உத்தரவின் போது குறிப்பிட்டனர்.