மேலும்

ஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரல் ரவீந்திரவின் பாதுகாப்பு அதிகாரி

கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்காக முன்னிலையான, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஒளிப்படம் பிடிக்க ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்கப்பட்டார்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில், கோட்டே நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இன்று முற்பகல் நீதிமன்றத்தில் கடற்படைச் சீருடையில் சரணடைந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, பிற்பகல் 2.30 மணியளவில் சாதாரண சிவில் உடையில் நீதிமன்றத்துக்கு வருமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதையடுத்து, பிற்பகல் 2.15 மணியளவில், நீதிமன்றத்துக்கு வெளியே வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுக்க முற்பட்டனர்.

இதன்போது, அங்கு சிவில் உடையில் வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஊடகவியலாளர்களைத் தள்ளி விட்டார்.

அத்துடன், சண்டே மோர்னிங், இதழின், ஊடகவியலாளர் இந்திக ஹன்டுவாலாவின் மார்பில் குத்தி தாக்குதல் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தாக்குதல் நடத்திய பாதுகாப்பு அதிகாரியை, அங்கிருந்த காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்துக்குள் கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *