மேலும்

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 121 உறுப்பினர்கள் ஆதரவு

தெரிவுக்குழு நியமனம் தொடர்பாக  சபாநாயகர் அறிவித்த முடிவு குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 121 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.ஆளும்கட்சியினர் வெளிநடப்புச் செய்ததால் எவரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை.

இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐதேக சார்பில் தலா 5 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி சார்பில் தலா ஒருவரும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வாக்கெடுப்பு ஆரம்பம்

தெரிவுக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தற்போது, பெயர் கூப்பிட்டு அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆதரவை குரல் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமையாக காட்சியளிக்கிறது.

இலத்திரனியல் வாக்கெடுப்பு – சபாநாயகர் அறிவிப்பு

ஜேவிபி, மற்றும் ஐதேகவின் கோரிக்கையை அடுத்து, தெரிவுக் குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக, இலத்திரனியல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

ஆளும்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ள நிலையில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

மகிந்த அணி நாடாளுமன்றில் இருந்து வெளியேறியது

நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை பலம் உள்ளதாகவும், தமக்கு தெரிவுக்குழுவில் 7 ஆசனங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.

சபாநாயகரின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், அவர் ஐதேகவின் சார்பாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினால் இதனால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஐதேக தரப்பில் இருந்து கூச்சல் எழுப்பப்பட்டது.

தினேஸ் குணவர்த்தன உரையாற்றிய முடிந்ததும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் பலர் சபையை விட்டு வெளியேறினர்.

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் – தெரிவுக்குழு அறிவிப்பு

நாடாளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில்  ஆரம்பமாகியுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவுக்குழு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில்,  தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, மகிந்த சமரசிங்க, எஸ்.பி.திசநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, ஆகிய 5 பேரும்,

ஐதேக சார்பில், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய ஐந்து பேரும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா மற்றும்  ஜேவிபி சார்பில் விஜித ஹேரத்தும், தெரிவுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

முடிவுகளின்றி முடிந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறையில் நடந்த  கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் இன்றைய அமர்வு மற்றும் தெரிவுக்குழு தொடர்பான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. இதனால் மீண்டும் குழப்பநிலை தோன்றும் சூழ்நிலை எழுந்துள்ளது.
(மு.ப  9.50 மணி)

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.  சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறுகிறது.
(மு.ப  9.30 மணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *